சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பொதுநல வழக்குத் தாக்கல். இதனைக் குறித்து இரண்டு வரங்களில் பதிலளிக்குமாறு, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு.
பல்கலைக்கழக தேர்வுகள் நடத்த வலியுறுத்தல்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
ஒத்தி வைக்கப்பட்ட கல்லூரி பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி, செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
பொது நல வழக்கு தாக்கல்
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த், கல்லூரி பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது சாத்தியமில்லை என்றும், கல்வியாண்டு காலம் கடந்த பின்னரும் மாணவர்கள் இறுதி ஆண்டுத் தேர்வுக்கு காத்திருப்பது அவர்களுக்கு மன உளைச்சலை அளிக்கும் என்றும் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை மாத இறுதிக்குள் நோய் தொற்றின் தாக்கம் உச்சம் தொடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும்
இந்நிலையில், கல்வி நிறுவங்கள் இப்போது திறக்கப்படும் சூழல் இல்லை.
எனவே, கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து, முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து, மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதனைக் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.