முகக்கவசம் அணிவதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு, சில நாட்களாக மட்டும் முகக்கவசம் அணியும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னைவிட அதிக தேசப்பற்றுமிக்கவர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளைப் பின்பற்றாத தலைவர்கள்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஆனால், இதில் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நாட்டு தலைவர்கள் அதனை பின்பற்றாமல் இருந்தது வேதனை அளித்தது. முகக்கவசம் அணிதலைக் பின்பற்றாமல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
முதன்முறையாக முகக்கவசம்:
பலர் அறிவுறுத்தியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் முகக்கவசம் அணிவதை பின்பற்றவில்லை. இதற்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ, முகக்கவசம் அணிவது டிரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார். இதன்பின் முதன்முறையாக, வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களை டிரம்ப் சந்திக்க சென்றபோது முகக்கவசம் அணிந்து சென்றார்.
டிரம்பை விட தேசப்பற்றுமிக்கவர் யாரும் இல்லை:
அப்போதில் இருந்து, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முகக்கவசம் அணிவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மேலும், முகக்கவசம் அணிவதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு, கண்ணுக்குத் தெரியாத சீன வைரசை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் மற்றும் அவர் அதனைப் பின்பற்றுவதனால் அதிக தேசப்பற்றுமிக்கவர் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.