டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டீசல் விலையை தலைநகரில் லிட்டருக்கு 8 ரூபாய் 36 பைசா குறைத்துள்ளது. முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பு மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வாட் குறைப்பு நடவடிக்கை:
டெல்லி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் டீசல் விலை மிக அதிகமாக இருப்பதாக கடந்த காலங்களில் இருந்து பலர், குறிப்பாக வர்த்தகர்கள் புகார் கூறினர். எனவே, இது முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் 30% குறைக்கப்பட்டுள்ளது. இப்போது டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ .82 ல் இருந்து ரூ .73.64 ஆக குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதோடு பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வருவது அவசியம். சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றத் தொடங்குமாறு கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல், டீசல் விலை:
இதற்கிடையில், தொடர்ந்து நான்காவது நாளாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வியாழக்கிழமை, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .80.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .81.94 ஆகவும் இருந்தது. ஐந்து நாட்களுக்கு முன்னர், அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டருக்கு 15 பைசா மட்டுமே அதிகரித்தன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த மாதத்தில் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை, பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஒரே மாநிலம் டெல்லி தான்.