தெற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த புயலால் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பொதுவாக ஒரு புயல் உருவாகும் பொழுது துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். தற்போது புரெவி புயல் எதிரொலியாக சென்னை முதல் கன்னியாகுமரியின் குளச்சல் துறைமுகம் வரை 11 இடங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. புயலின் தாக்கத்தை பொறுத்து 11 எண் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். அதற்கான அர்த்தங்களை பார்க்கலாம் வாங்க…
- 1ம் எண் – புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகி உள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
- 2ம் எண் – கடலில் புயல் உருவாகியுள்ளது. துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.
- 3ம் எண் – திடீர் காற்று மற்றும் மழை உருவாகக்கூடிய சூழல் நிலவுகிறது.
- 4ம் எண் – துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து.
- 5ம் எண் – உருவாகி உள்ள புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையை கடக்கும்.
- 6ம் எண் – புயல் துறைமுகத்தின் வலது பக்கம் கரையை கடக்கும்.
- 7ம் எண் – துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையை கடக்கும்.
- 8ம் எண் – அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையை கடக்கும்.
- 9ம் எண் – அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையை கடக்கும்.
- 10ம் எண் – அதிதீவிர புயல் உருவாகி உள்ளது. துறைமுகத்தின் வழியாகவோ, அதன் அருகிலோ அது கரையை கடக்கும்.
- 11ம் எண் – வானிலை எச்சரிக்கை மையத்துடன் உண்டான தகவல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம்.