கொரோனாவால் தமிழ்நாடு பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கே வழி தெரியாத நிலையில் புதிய அச்சுறுத்தலாக டெங்கு காய்ச்சல் உருவெடுத்துள்ளது.
டெங்கு காய்ச்சல்
தமிழ்நாட்டில் சென்னையில் தான் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இந்த சூழலில் தற்போது டெங்கு பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று இடியாய் இறங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மழை காலத்தின்போதும் டெங்கு காய்ச்சலின் அச்சுறுத்தல் தமிழ்நாடு முழுவதும் நிலவியது. தென்மேற்கு பருவமழை அதைத் தொடர்ந்து வரும் வட கிழக்கு பருவமழை ஆகிய காலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் தமிழ்நாட்டில் பரவியது.
டெங்கு பரவும் விதம்
ஏடிஸ் என்ற ஒருவகை கொசு கடிப்பதால் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. நன்னீரில் மட்டுமே இந்த வகை கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதாவது தேங்கி நிற்கும் மழை நீரில் முட்டையிட்டு இந்த கொசுக்கள் உருவாகின்றன. டயர், சிரட்டை, பயன்படுத்தப்படாமல் வெளியே போடப்பட்ட உரல்கள், பிளாஸ்டிக் பொருள்கள் என வீட்டிற்கு அருகில் உள்ள பொருள்களில் தேங்கும் மழை நீரில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
சென்னையில் முதல் பலி
இதில் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக சென்னை ஆலந்தூர் அருகே நங்கநல்லூரில் டெங்கு காய்ச்சலால் 3 வயது சிறுமி பலியாகியுள்ளார். இது சென்னைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பெரும் எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது.
கொரோனா காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா சோதனையில் தொற்று இல்லை,ஆனாலும் டெங்கு இருப்பது உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கோவிட் -19 தொற்று 1.3 மில்லியன் -ஒரே நாளில் 49,310 புதிய கோவிட் -19 கேஸ்கள் பதிவு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி டெங்கு காய்ச்சல் ஒழிப்பிலும் கவனம் செலுத்தும் என அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதனுடன் சேர்த்து டெங்கு ஒழிப்புப் பணியிலும் ஈடுபடுவார்கள் என அரசு சார்பில் கூறப்படுகிறது.
தூய்மை அவசியம்
மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலமாகவே இதை ஒழிக்க முடியும். . வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். அதில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரம் இல்லாமல் உள்ள பகுதிகள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும். கொரோனாவை மட்டுமல்ல டெங்குவையும் அரசுடன் இணைந்து விரட்ட போராடுவோம்!