தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
அந்தமான் & அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. இது அடுத்த 36 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் டிசம்பர் 2ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற பகுதிகளில் மிதமான மழையும் பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் 2ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரப் பகுதிகள், குமரி பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.