லடாக் எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் வரை சீன ராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி லே பயணம் எதிரொலி..!
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 3ம் தேதி காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தது அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
சீனா பின்வாங்கியது..!
இந்நிலையில் கார்ப்ஸ் கமாண்டர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன இராணுவம் கூடாரங்கள், வாகனங்கள் மற்றும் துருப்புக்களை 1-2 கி.மீ தூரத்திற்கு பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன கனரக வாகனங்கள் ஆயுதங்களுடன் கால்வான் நதி பகுதியில் இன்னும் உள்ளன என்றும் இந்திய இராணுவம் நிலைமையை எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் தீவிர இராஜதந்திர மற்றும் இராணுவ ஈடுபாடு மற்றும் தொடர்புகளின் விளைவாக நிகழந்துள்ளதாகவும் இந்த சந்திப்புகள் பிரதமர் மோடியின் லே பயணத்தைத் தொடர்ந்து ஒரு தீர்க்கமான மற்றும் உறுதியான செய்தி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.