கடந்த ஜூன் மாதம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பலில் 7 வயது சிறுமியை பூக்கடை வைத்திருக்கும் ராஜா என்பவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். தற்போது ராஜாவிற்கு புதுக்கோட்டை நீதிமன்றம் மரண தண்டனை வழங்குமாறு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை:
தற்போது நாம் மிகவும் மோசமான சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே பெண்களை துன்புறுத்தி வருகின்றனர். மேலும் இன்றைய காலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமை அதிகரித்து உள்ளது. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்தும் பலனில்லை. காரணம் அதற்காக கடுமையான தண்டனைகளில் விதிக்கப்படுவதில்லை என்பதே. இந்த மோசமான சமூகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம் சில மோசமான ஆண்களின் கொடூர செயல்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி மாயமானாள். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் ஜூலை 1ம் தேதி அன்று அதே பகுதியில் உள்ள வண்ணாங்குலத்தில் அந்த சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் விசாரணை நடத்திய போலீசார் அந்த சிறுமி, அதே பகுதியில் பூக்கடை வைத்திருக்கும் ராஜா என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மரண தண்டனை விதித்த நீதிமன்றம்:
இதுகுறித்து ராஜாவை போலீசார் கைது செய்து அவர் மேல் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்பு சட்டம் போக்ஸோ உள்ளிட்ட 7 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு நேற்று புதுக்கோட்டையில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி சத்யா தலைமையில் நடைபெற்றது.
முடிவில் ராஜாவிற்கு மூன்று மரண தண்டனை, ஒரு ஆயுள் மற்றும் இரண்டு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியாக 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மரண தண்டனை விதித்த பின் தனது பேனாவை நீதிபதி சத்யா உடைத்தார். மேலும் புதுக்கோட்டையில் மரண தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி வழங்கியுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, முதல்வர் நிவாரண நிதியில், 5 லட்சம் ரூபாய், வன்கொடுமை தடுப்பு சட்ட நிதியில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் தி.மு.க சார்பில் 5 லட்சம் ரூபாய், நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் 50 ஆயிரம், ராமநாதபுரம் எம்.பி., சார்பில் ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதனை சிறுமியின் தந்தை நாகூரான் கடந்த ஜூலை மாதம் பெற்றுக்கொண்டார். மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசின் பசுமை வீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.