சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் இலவச உணவு சேவை திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் இன்று முதல் ஆரம்பம்:
தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் 10 மே முதல் 24 மே வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு, தனியார் பேருந்து, வாடகை டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட வாகன சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடமான மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் மதியம் 12மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு 24 மணிநேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதற்கு ஏற்ற வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவை இன்று முதல் தொடங்குகிறது.
இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடங்கி வைக்க உள்ளார். அதுமட்டும் அல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க சென்னை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மா.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.