சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43-வது புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 43-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. கண்காட்சியை வரும் ஜனவரி 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதில் சிறப்பம்சமாக கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த கண்காட்சியும் இடம் பெறுகிறது.
இலவச அனுமதி:
சென்னை மெட்ரோவுடன் இணைந்து இம்முறை கண்காட்சி விளம்பரப்படுத்தப்படவுள்ளது. அதனால் மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு இலவச அனுமதி உண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சென்னை புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் ரூ.10, பள்ளி மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது.
கண்காட்சியின் நேரம் மற்றும் சிறப்பம்சங்கள்:
வேலைநாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 700-க்கும் அதிகமான அரங்குகளில் 15 லட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் இரண்டு கோடி புத்தகங்கள் இடம் பெற உள்ளன. 13 நாட்களும் புத்தக வெளியீடுகள், தலைசிறந்த எழுத்தாளர்கள் கவிஞர்கள் விஞ்ஞானிகள் கலை உலகினர் பங்கு பெறும் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.