தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து வரும் 14ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அசுர வேகத்தில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் வரும் 14ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து – மாநில துணை முதல்வர் அறிவிப்பு!!
அதில் தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்குவது, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்வது, பொதுப் போக்குவரத்தை மீண்டும் அனுமதிப்பது மற்றும் ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.