தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டு வருவதால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு இலவச தரிசனத்தில் 80,000க்கும் மேலான பக்தர்கள் 30 முதல் 40 மணி நேரம் காத்திருந்து வழிபாடு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் 30 ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி கிழமைகளில் சுப்ரபாத சேவை, விஐபி பிரேக் தரிசன பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக வார இறுதி நாட்களில் இலவச தரிசனத்தில் கூடுதலாக சுமார் 4 மணி நேரம் கிடைப்பதால் 22,000 பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கலாம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் நடைபெறும் திருப்பாவாடை சேவையிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூடுதலாக அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் வியாழக்கிழமைகளில் கூடுதலாக அரை மணி நேரம் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.