தமிழகத்தில் பொதுமக்களுக்கு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மினி கிளினிக் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று ‘அம்மா மினி கிளினிக் திட்டம்’ முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது.
அம்மா மினி கிளினிக்:
ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் உட்பட சில மருத்துவ அடிப்படை உபகரணங்களுடன் கூடிய 2000 ‘அம்மா மினி கிளினிக்’ தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தார். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் நிலவுவதால் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த மினி கிளினிக்குகள் காலை 9 மணிமுதல் 11 மணி வரையும், மாலை 4 மணிமுதல் 7 மணி வரையும் செயல்பட உள்ளது. இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு மாதாந்திர மருந்துகளும், சளி, காய்ச்சல் மற்றும் தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் இன்று இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பின்னர் சென்னை முழுவதும் 200 இடங்களிலும், பிற நகர்ப்புறங்களில் 200 மற்றும் கிராமப்புறங்களில் 1,400 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது. 200 நகரும் மினி கிளினிக்களும் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை விரைவாக கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.