இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஜூன் 30ம் தேதி வரை அனைத்து விதமான பயணியர் ரயில் சேவையை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறப்பு ரயில்கள்:
இந்தியாவில் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு காரணத்தால் பயணியர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பயணியர் ரயில் சேவையை மீண்டும் துவக்க முடிவு செய்த ரயில்வே துறை முதற்கட்டமாக 15 ரயில்களை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு பல்வேறு விதிமுறைகளுடன் இயக்கியது.
இந்த ரயில்கள் அனைத்தும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டவை. நாடு முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் குளிர்சாதன வசதி கொண்ட பயணியர் ரயில்களை இயக்குவது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக முதல்வரும் இந்த கோரிக்கையை முன்வைத்த காரணத்தால் மே 31 வரை தமிழகத்திற்கு பயணியர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஏற்கனவே முன்பதிவு செய்த 2 ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாடு முழுவதும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விதமான பயணியர் ரயில்களும் (எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில் சேவை) ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து உள்ளது. மேலும் ஏற்கனவே ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானியங்கி முறையில் ரத்து செய்யப்பட்டு, முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |