நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு என அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ஆதாரில் உள்ள பெயர், விலாசம் உள்ளிட்டவை சரியாக இருக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. தவறாக இருக்கும் பட்சத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் திருத்திக் கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் கரூர் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கோடந்தூர், மின்னவேலி, கூடலூர் மேற்கு, வளையல் காரன் புதூர், வேளாண் செட்டியூர், முனையனூர், நெய்தலூர் தெற்கு, வேளாம்பூண்டி, புறத்தாகுடி, சுக்காலியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஆதார் கார்டில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம் இன்று (ஜூன் 7) முதல் 20ம் தேதி வரை அந்தந்த பகுதி அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில் ஆதார் திருத்தங்கள் மட்டுமல்லாமல் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கு, மத்திய மாநில அரசுகளின் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட தபால் துறையின் பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வுகளும் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.