தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்விளை எனும் கிராமத்தில் விளையாடச் சென்ற 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேடிய பொழுது அங்குள்ள காட்டுப்பகுதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.
7 வயது சிறுமி கொலை:
கல்விளை இந்திராநகரை சேர்ந்த சேகர் என்பவரது 7 வயது மகள் இன்று காலை விளையாடச் சென்றுள்ளார். மதியம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி உள்ளனர். அப்போது வடலிவிளை பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் கால்வாயின் அடியில் ஒரு சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதைப் பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிறுமியின் உதட்டில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடல் ஒரு டிரம்மில் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.