இந்த புத்தாண்டு முதல் தனியார் நிறுவனங்கள் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும், நடப்பாண்டில் சம்பள உயர்வு 8 சதவீதம் ஆக இருக்கும் என்றும் ”மை ஹயரிங்கிளப் டாட் காம் அண்ட் சர்காரி நாகுரி இன்போ எம்பிளாய்மென்ட் ட்ரெண்ட் சர்வே – 2020” ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு:
இந்த ஆய்வானது 42 முக்கிய நகரங்களில், 12 தொழில் துறைகளில் உள்ள 4,278 நிறுவனங்களில் எடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்த ஆண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணி நகரங்களான சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், புனே, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் 5.15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதர வேலைவாய்ப்புகள் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ஏற்படுத்தப்படும். நாட்டின் வடமண்டலத்தில் 1.96 லட்சம் வேலைவாய்ப்புகளும், தென் மண்டலத்தில் 2.15 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சம்பளம், போனஸ் போன்றவற்றின் உயர்வு ஒற்றை இலக்கத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஒட்டுமொத்த ஊதிய உயர்வு 8 சதவீதம் ஆக இருக்கும் எனவும் சர்வே மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆண்டில் 6.2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் 5.9 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டது ஆகிய விபரங்கள் இவ்வாய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.