பல்வேறு மாநிலங்கள் தங்களின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்து உள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு குறித்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, இன்று நண்பகல் 12 மணியளவில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்கிறது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் பல வித ஆலோசனை நடைபெற்றது. மேலும் மாணவர்கள்,பெற்றோர்கள்,கல்வியாளர்கள்,பொதுமக்கள் என அனைவரிடமும் கருத்துக்கள் இணையவழியில் பெறப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பகல் 12 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
மேலும் பிளஸ் 2 தேர்வு குறித்து அனைத்து தரப்புகளின் கருத்துக்கள் அடிப்படையில் சரியான முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. முக்கிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதன் பின்னர் முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதன்பிறகு பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் இறுதியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.